ஹைதராபாத்: கிரிக்கெட் விளையாட்டு உயிரைப் பறிக்கும் ஆபத்தானதாக உருவெடுத்து வருகிறது.. ஹைதராபாத்தில் கிரிக்கெட் பந்து பட்டு 6 வயது சிறுவன் பலியாகி இருக்கிற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கொல்கத்தாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அங்கீட் கேசரி பீல்டிங் செய்யும் போது படுகாயம் அடைந்து பலியானார்.

இந்த நிலையில் ஆந்திரா-தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத் வனஸ்தாலிபுரம் சஹாரா எஸ்டேட்ட் பகுதியில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது வம்சி கிருஷ்ணா என்ற 6 வயது சிறுவன் பேட்டிங் செய்து கொண்டிருந்தான்.
மற்றொரு சிறுவன் பந்து வீசினான். வேகமாக பவுலிங் வீசிய போது பந்து சிறுவன் நெஞ்சில் பட்டு எகிறியது. இதில் அப்படியே சிறுவன் வம்சி கிருஷ்ணா சுருண்டு விழுந்தான்.
உடனடியாக மற்ற சிறுவர்களும் அங்கிருந்தவர்களும் வம்சியை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக கூறினார். இந்த மரணம் தொடர்பாக இதுவரையாரும் கைது செய்யபடவில்லை. இது தொடர்பாக போலீசார் இந்திய தண்டனை சட்டம் 174 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சிறுவனை காயபடுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.