
ஸ்பின்னில் வீழ்ந்த கோலி
தத்தளித்த படகை கரை சேர்க்க உதவியதில் கேப்டன் விராட் கோலியும் ஒருவர். 96 பந்துகளை சந்தித்த கோலி 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் விளையாடிய விதத்தை பார்த்த போது, இரண்டு வருடம் கழித்து ஒரு செஞ்சுரி பார்சல் சொல்லலாம் போல என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், மொயீன் அலி ஓவரில் கேட்ச் ஆனார். வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் திறம்பட எதிர்கொண்ட கோலி, கடைசியில் ஸ்பின்னர் மொயீன் அலியிடம் வீழ்ந்தார்.

கடும் அதிருப்தி
மொயீன் அலி ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பந்தை லேண்ட் செய்ய, விராட் கோலி அதனை நேராக மீட் செய்தார். ஆனால், பந்து கோலி பேட்-ன் வெளிப்புறம் பட்டு, ஸ்லிப்பில் நின்றிருந்த கிரெய்க் ஓவர்டன் கைகளில் தஞ்சமடைந்தது. இதனை கோலி துளியும் எதிர்பார்க்கவில்லை. அவர் எப்படியும் அரைசதம் அடிப்பார் என்றே அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், அபாரம் என்று சொல்ல முடியாத ஒரு ஸ்பின் பந்தில் தனது விக்கெட்டை இழந்து அதிருப்தியுடனேயே வெளியேறினார்.

கோலியின் செயல்
எல்லாவற்றுக்கும் மேல் அவர் அவுட்டாகி சென்ற போது, இந்தியாவின் 312 மட்டுமே. அவர் தான் ஆறாவது விக்கெட்டாக வெளியேறினார். அப்போது இங்கிலாந்தை விட இந்திய அணி 211 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்த நிலையில், இந்தியாவை 350 ரன்களுக்குள் இங்கிலாந்து ஆல் அவுட் செய்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கோலியும் அந்த சிந்தனைகளோடே ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் நுழைய முற்பட்ட போது, கோபமும், விரக்தியும், ஏமாற்றமும் ஒருசேர இருந்த கேப்டன் கோலி, சுவரை நோக்கி ஓங்கி தனது கையால் குத்திக் கொண்டே உள்ளே சென்றார். இந்த வீடியோ தான் கோலி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து நிதானம்
ஆனால், அதன் பிறகு ஷர்துல் தாகூர் - ரிஷப் பண்ட் 7வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததை லண்டன் ஓவல் மைதானம், தனது வரலாற்றுப் பக்கங்களில் பொறித்தது வேறு கதை. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர், 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்த, ரிஷப் பண்ட்டும் அரைசதம் அடிக்க இந்திய அணி 466 ரன்களை தனது இரண்டாம் இன்னிங்சில் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
நாளை கடைசி நாள் ஆட்டம்.. நிச்சயம், பெரும் த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த நாளாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இன்று பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்யும் பிட்ச் தன்மை நாளையும் தொடர்ந்தால், இங்கிலாந்து வெற்றிப் பெறவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கிறது.இங்கிலாந்து அணியில் மொயீன் அலி மெயின் ஸ்பின்னராக இருந்தாலும், ஜோ ரூட்டும் பந்து வீசுவார். இன்று கூட, ஷர்துல் விக்கெட்டை கைப்பற்றியது அவர் தான். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஜடேஜாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல். என்ன நடக்கப் போகிறதோ!!

விக்கெட் எடுக்க திணறல்
இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டாம் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஓப்பனர்கள் மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளனர். அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் இருவருமே, இந்திய பவுலிங்கை நேர்த்தியாக எதிர்கொண்டனர். வேகப்பந்து வீச்சு, ஜடேஜாவின் ஸ்பின் அட்டாக் என அனைத்தையும் பக்காவாக எதிர்கொண்டனர். இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றிப் பெற இன்னும் 291 ரன்கள் தேவை. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து கைகளில் 10 விக்கெட் முழுமையாக இருக்கிறது. இதனால், ஓவருக்கு ஓவர் நாளை போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











