
முன்னாள் வீராங்கனை
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை கே.எஸ். ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார், எஸ்.கே. சுமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயின் சிகிச்சைக்கு ஸ்ரவந்தி ஏற்கனவே ரூ.16 லட்சம் வரை செலவு செய்த நிலையில் மேலும் ரூ. 6.77 லட்சம் தேவைப்பட்டுள்ளது.

கோரிக்கை
இதனையடுத்து ஸ்ரவந்தி நாயுடு நிதியுதவி கேட்டு பிசிசிஐ-யிடமும், ஐதராபாத் கிரிக்கெட் வாரியத்திடமும் மனு கொடுத்திருந்தார். ஆனால் அதுகுறித்து இன்னும் எந்தவொரு பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை. பிசிசிஐ சார்பில் இருந்தும் கூட அவரின் பிரச்னை கண்டுக்கொள்ளப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

விராட் கோலி உதவி
இதனையடுத்து பிசிசிஐ-ன் முன்னாள் தலைவர் ஷிவ்லால் யாதவ், ஸ்ரவந்தியின் தேவை குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் இந்திய அணி கேப்டனையும் டேக் செய்திருந்துள்ளார். இதனை பார்த்த விராட் கோலி உடனடியாக ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார் மருத்து செலவிற்காக ரூ. 6.77 லட்சம் பணத்தை கொடுத்து உதவியுள்ளார்.

பொது சேவை
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து ஏற்கனவே கொரோனா நிவாரணத்திற்காக நிதி திரட்டல் முயற்சியில் ஈடுபட்டனர். 7 நாட்கள் ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த நிதி திரட்டல் முயற்சியில் சுமார் 11 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது. அதில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா வழங்கிய ரூ.2 கோடியும் அடங்கும். மொத்த பணத்தையும் அவர்கள் கெட்டோ என்ற தன்னார்வ அமைப்புக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications