“அந்த கருத்தையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்”.. ரகானேவின் டெஸ்ட் எதிர்காலம்.. கோலி மறைமுக பதில்!
மும்பை; இந்திய அணியில் மீண்டும் அஜிங்கியா ரகானே விளையாடுவாரா என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் இன்றுடன் முடிவடைந்தன.
இதில் டி20 தொடரை கைப்பற்றியிருந்த இந்திய அணி 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி எதிர்காலம்
இந்திய அணியின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும் வகையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது. இதற்கு காரணம் சீனியர் வீரர்களின் சொதப்பல்களும், இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளும் ஆகும். குறிப்பாக இந்த டெஸ்ட் தொடருடன் அஜிங்கியா ரகானேவின் டெஸ்ட் எதிர்காலம் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டி
டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக உள்ள ரகானே அனுபவ மிக்க வீரர் ஆவார். ஆனால் சமீப காலமாக அவரின் ஃபார்ம் மோசமாக இருந்தது. நியூசிலாந்து தொடரே வாழ்வா சாவா ஆட்டமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் தன்னை நிரூபிக்கவில்லை. இதனால் அவரின் இடத்தை தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்துள்ளார். தனது அறிமுக போட்டியிலேயே அவர் சதம் மற்றும் அரைசதம் விளாசி அசத்தினார்.

ரகானே ஃபார்ம்
2வது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரகானே இனி மீண்டும் அணிக்குள் வருவாரா என்ற கேள்வி உலா வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார். என்னால் ரகானேவை புரிந்துக்கொள்ள முடியவில்லை. யாராலும் அதனை கூற முடியாது. ஏனென்றால் எதில் தவறு செய்கிறோம், எதை மேம்படுத்த வேண்டும் என்பது அந்த வீரருக்கு மட்டுமே புரியும். என்னைப்பொறுத்தவரை இந்திய அணிக்காக பல்வேறு முக்கிய இன்னிங்ஸ்களை ஆடிய வீரர்களை அணிக்குள் வைத்திருக்க தான் முயற்சிப்போம்.

உறுதுணை
ஒரு வீரர் மிகவும் அழுத்தமான சூழலில் இருந்தால், உடனே மக்கள் அவர் இனி விளையாடுவாரா, அவரின் எதிர்காலம் என்ன என்பது போல வினவுகின்றனர். ஆனால் அதனையெல்லாம் அணிக்குள் கண்டுக்கொள்ள மாட்டோம். ஒரு வீரரை இன்று புகழ்ந்தால், 2 மாதங்களில் அதே வீரரை புறக்கணிக்க கூறுகிறார்கள். ஆனால் அதனையெல்லாம் துளிக்கூட ஏற்கமாட்டோம். அந்த வீரருக்கு உறுதுணையாக இருப்போம்.

அதிர்ச்சி
ஃபார்மை ஒரே மாதிரி வைப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது அந்த வீரருக்கு மட்டுமே தெரியும் எனக்கோலி கூறினார். இதுஒருபுறம் இருக்க தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திலும் ரகானே இடம்பெற மாட்டார் எனத்தெரிகிறது. அவரோடு சேர்ந்து சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவும் வெளியேறலாம்.


Click it and Unblock the Notifications