சங்கக்கரா அபாரம்.. முதல் முறையாக 20-20 உலகக் கோப்பையை வென்றது இலங்கை!
மிர்பூர்: விக்கெட் கீப்பர் சங்கக்கராவின் பொறுப்பான மற்றும் அபார ஆட்டத்தால் டுவென்டி 20 உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது இலங்கை.
இந்தியாவை இறுதிப் போட்டியில் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
131 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கைக்கு சங்கக்கராவின் ஆட்டம் பேருதவியாக அமைந்தது. சிறப்பாக ஆடிய சங்கக்கரா அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

இலங்கை 6 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் விக்கெட்டாக குசால் பெரைராவை இழந்தது.
இந்தியாவை கடைசி நேர பந்து வீச்சில் முடக்கிப் போட்டு 130 ரன்கள் மட்டுமே எடுக்க அனுமதித்த இலங்கை தனது வெற்றித் துரத்தலை சறுக்கலோடு தொடங்கியது. மொஹித் சர்மா பந்தில் வீழ்ந்தார் பெரைரா.
முதல் பந்தில் பவுண்டரி விளாசியபோதும் 2வது ஓவரில் இந்தியாவின் மொஹித் சர்மாவின் பந்துக்கு குசால் பெரைராவை இழந்தது. 7 பந்துகளில் 5 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் பெரைரா. இவர்தான் முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து திலகரத்னே தில்ஷன் 18 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை கோஹ்லி அழகாக கேட்ச் செய்து அனுப்பி வைததார். அதைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த மஹளா ஜெயவர்த்தனே 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெய்னா பந்தில் அஸ்விடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இவரையடுத்து தற்போது 4வது விக்கெட்டாக திரிமன்னே மிஸ்ரா பந்து வீச்சில், டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அவர் எடுத்தது 7 ரன்கள்.
அதன் பின்னர் கடைசி வரை சங்கக்கரா அவுட்டாகாமல் 52 ரன்களைக் குவித்து இலங்கைக்கு வெற்றித் தேடித் தந்தார்.
ஆட்ட நாயகன் சங்கக்கரா
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயனாக இலங்கை வீரர் சங்கக்கரா தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் நாயகன் விராத் கோஹ்லி
தொடர் நாயகனாக விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார். நான்கு அரை சதங்களை இந்தத் தொடரில் விளாசியிருந்தார் கோஹ்லி. மொத்தம் 319 ரன்களை இந்தத் தொடரில் அவர் எடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications