புனே: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 30வது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இருப்பதால், இன்றைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஷாகிதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்பின்னர் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்களும், குசல் மெண்டிஸ் 39 ரன்களும் விளாசினர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் சேஸிங் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
இதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் - ஜத்ரான் கூட்டணி களமிறங்கியது. இதில் மதுஷங்கா வீசிய முதல் ஓவரின் 4வது பந்திலேயே அதிரடி வீரர் குர்பாஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் ரசிகரக்ளுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் தொடர்ந்து இணைந்த ரஹ்மத் ஷா - ஜத்ரான் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசிய இந்த கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன்காள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஜத்ரான் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ரஹ்மத் ஷாவுடன் கேப்டன் ஷாகிதி இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்தார். சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா அரைசதம் கடந்து, பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இதனால் 25 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் ஸ்கோர் 120 ரன்களை கடந்தது. அப்போது ரஜிதா பந்துவீச்சில் ரஹ்மத் ஷா 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் ஷாகிதி - ஒமர்சாய் கூட்டணி இணைந்தது. இதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது.

கேப்டன் ஷாகிதி 67 பந்துகளில் அரைசதம் அடிக்க, புதிதாக களம் புகுந்த ஒமர்சாய் 50 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த இரு பேட்ஸ்மேன்களும் எந்த பதற்றமும் இல்லாமல், மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து அசத்தினர். இறுதியாக 45.2 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 242 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த ஒமர்சாய் 73 ரன்களும், ஷாகிதி 58 ரன்களும் சேர்த்தனர்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இது 3வது வெற்றியாகும். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பும் அந்த அணிக்கு பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.