அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி இருப்பது அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்ற ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஆசிய கோப்பை அளவில் முதல் சொத்தை கூட தாண்டவில்லை.
வங்கதேசத்திற்கு எதிராக அவர்கள் அடைந்த தோல்வியே இதற்கு காரணமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக கடைசி ஓவரில் மட்டும் 32 ரன்களை அடித்து ஆப்கானிஸ்தான் அணி கடும் போட்டியை கொடுத்த நிலையில், இலங்கை அணி தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி வென்றது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரசித் கான், நாங்கள் எங்களுடைய இன்னிங்ஸை முடித்த விதம் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இலங்கை அணியில் மூன்று ஓவருக்கு ஒரு முறை சுழற் பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக வீசுவார்கள் என்று எங்களுக்கு தெரியும்.
இதனால் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கடைசி எங்களுக்கு ஒரு பெரிய ஓவர் கிடைத்தது. இதுபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் சரியாக செயல்பட்டு இருந்தால் நிச்சயமாக இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம்.
இந்த ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இல்லை. துபாய் ஆடுகளத்தை விட இது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இங்கு நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடினால் நிச்சயம் ரன்கள் கிடைக்கும். இந்த ஆடுகளத்தில் 170 ரன்கள் என்பது எட்டுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனால் நாங்கள் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எங்களால் 150 ரன்ளை சரி செய்ய முடியவில்லை. டி 20 கிரிக்கெட்டில் இதுதான் நடக்கும். ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் முன்னோக்கி ஒரு அணியாக நாங்கள் செல்ல வேண்டும். ஒரே தவறை திரும்ப செய்யக்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் பல ஐசிசி தொடர், ஆசிய கோப்பைத் தொடர் என அனைத்துமே சிறப்பாக விளையாடுகிறோம். ஒவ்வொரு தொடருக்கும் நாங்கள் நல்ல முறையில் பயிற்சி செய்கின்றோம்.
நான் எங்கள் அணி வீரர்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன். ஆனால் முதல் சுற்றில் இருந்து நாங்கள் வெளியேறுவோம் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதி வரை நாம் சென்றிருக்கிறோம். இதனால் சூப்பர் 4 வரையாவது நாம் சென்று இருக்க வேண்டும். இதுதான் ரசிகர்கள் நம் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு. நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை ஆய்வு செய்து மீண்டும் ஒரு பலமான அணியாக திரும்புவோம் என்று ரஷீத்கான் தெரிவித்துள்ளார்.