கொழும்பு : இலங்கை டி20 அணி கேப்டன் வனிந்து ஹசரங்காவிற்கு இரண்டு போட்டிகள் ஆட தடை விதித்து இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அம்பயர் நோ பால் கொடுக்காததால் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார் ஹசரங்கா.
அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 209 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் வீசிய ஃபுல் டாஸ் பந்து இடுப்பு உயரத்துக்கும் மேல் வந்தது. அப்படி பந்து வீசினால் அது நோ பால் ஆகும். ஆனால், அம்பயர் நோ பால் அறிவிக்கவில்லை. அந்தப் போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அம்பயர் தவறால் தோல்வி அடைந்ததாக கருதிய இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா, போட்டி முடிந்த உடன் பேசிய போது அம்பயர் குறித்து கடுமையாக விமர்சித்தார். அது நோ பால் என்பதை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் சர்வதேச போட்டிகளுக்கு அம்பயராக இருக்க தகுதியே இல்லை. அவர் வேறு ஏதாவது வேலை செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறி இருந்தார் ஹசரங்கா.
அம்பயரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதால் அவருக்கு ஐசிசி விதிப்படி 3 குறைப்பாட்டுப் புள்ளிகள் (Demerit points) மற்றும் போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஒரு வீரர் 5 குறைப்பாட்டுப் புள்ளிகளை பெற்றால் அந்த வீரருக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டி அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.
ஹசரங்கா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு முறை தவறாக நடந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது.