அகமதாபாத் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி 165 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இரண்டு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன், அலெக்ஸ் கெரி, ஆடம் சாம்பா உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் மட்டுமே இடம்பெற்றனர். இதை தவிர பல இளம் வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் பல வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்து இருப்பதால் இளம் பவுலர்கள் களமிறங்கினர்.
இதில் அனைவரும் அபாரமாக செயல்பட்டனர். குறிப்பாக சிஎஸ்கே அணி தேர்வு செய்திருக்கும் நாதன் எல்லீஸ் 9 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணியின் முன் வரிசை வீரர்கள் நிஷாங்கா, பெர்னான்டோ, குசல் மெண்டிஸ், கமிண்டு மெண்டீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் கேப்டன் அசலங்கா தனி ஆளாக நின்று அதிரடியாக விளையாடி 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இலங்கை அணி 214 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர்கள் ஜேக் பிரஷர், இரண்டு ரன்களிலும், கூப்பர் 3 ரன்களிலும் ஆட்டம் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மித் 12 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் 15 ரன்களிலும் வெளியேறினர். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் தனியாக போராடி 42 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அருண் ஹார்டி 32 ரன்கள் எடுத்து துணை நின்றார். எனினும் இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவர்களில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து தோல்வியை தழுவியது. முன்னாள் சிஎஸ்கே வீரர் மகிஷ் தீக்சனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.