கொழும்பு: 2026 டி20 உலககோப்பையில் இலங்கை வீரர் பதூம் நிசாங்காவின் அபார சதத்தால், ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் ஜிம்பாப்வே அணியுடன் தோல்வியை தழுவியதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.
காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்தது. மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான அரைசதங்களால் பத்து ஓவர்களுக்குள் நூறு ரன்களைக் கடந்தது. இருப்பினும், இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் ஏற்பட்ட சரிவில், கடைசி நான்கு விக்கெட்டுகளை வெறும் ஆறு ரன்களுக்கு இழந்து, அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்கா, தனது முதல் டி20 உலகக் கோப்பை சதத்தை வெறும் 52 பந்துகளில் விளாசி ஆஸ்திரேலியாவின் கனவுகளை கலைத்தார். 10 பவுண்டரிகள், ஐந்து சிக்ஸர்களுடன் இவர் அடித்த சதம், குஷல் மெண்டிஸுடன் இணைந்து 97 ரன்கள் அதிரடி கூட்டணி அமைக்க உதவியது. இலங்கை, 182 ரன்கள் இலக்கை இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எளிதாக எட்டியது.
இந்த வெற்றியின் மூலம், தொடரில் மூன்றாவது வெற்றியைப் பெற்ற இலங்கை, ஆறு புள்ளிகளுடன் சூப்பர் எட்டுக்கள் சுற்றுக்கு தகுதிபெற்ற நான்காவது அணியாக மாறியுள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலியா தனது மூன்று போட்டிகளில் அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று, பெரும் நெருக்கடியில் உள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த ஜிம்பாப்வே அணி நான்கு புள்ளிகளுடன் உள்ளது. சூப்பர் எட்டுக்கள் சுற்றுக்கு இலங்கையுடன் இணைய ஜிம்பாப்வேயே அதிக வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது. பிப்ரவரி 17 அன்று அயர்லாந்துடனும், 19 அன்று இலங்கையுடனும் ஜிம்பாப்வேக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. இதில், ஒன்றில் வென்றாலே ஜிம்பாப்வேக்கு சூப்பர் எட்டுக்கள் இடம் உறுதியாகும்.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் வாய்ப்பு இல்லாமல் போகவில்லை. அடுத்த சுற்றுக்கு தகுதிபெற, ஜிம்பாப்வே தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். அயர்லாந்தும் தகுதிபெற போட்டியிடுவதால், ஜிம்பாப்வேக்கு சவால் அளிப்பார்கள். இலங்கை ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டதால், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வளிக்கலாம்.
ஒருவேளை அயர்லாந்து, ஜிம்பாப்வேயை தோற்கடித்தால், ஆஸ்திரேலியா பிப்ரவரி 20 அன்று ஓமானை தோற்கடித்து நான்கு புள்ளிகளைப் பெற வேண்டும். அயர்லாந்தின் நெட் ரன் ரேட்டை +0.150 விட தங்கள் நெட் ரன் ரேட் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது ஆஸ்திரேலிய ரன் ரேட் +0.414 என்ற அளவில் உள்ளது. ஒரு வேலை ஜிம்பாப்வே சூப்பர் 8 தகுதி பெற்றால், இந்திய அணி ஜிம்பாப்வேவை சென்னையில் சூப்பர் 8 சுற்றில் எதிர்கொள்ளும்.
ஆஸ்திரேலியாவின் இந்த தொடரில் மோசமான ஆட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம் வீரர்களின் காயப் பிரச்சினைகள் தான். பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை. இலங்கை போட்டிக்கு விளையாடிய மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் ஆகியோரும் சிறிய காயங்களுடன் விளையாடி வருகின்றனர்.