கண்டி: இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது, இதற்கு காரணம், அவரது இன்னிங்ஸை பதும் நிசாங்காவின் அசத்தல் கேட்ச் முடிவுக்குக் கொண்டு வந்தது. சில பந்துகளுக்கு முன் ஒரு எளிதான கேட்சை தவறவிட்ட நிஸ்ஸங்கா, லெக்-ஸ்பின்னர் துஷான் ஹேமந்தா வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை, மேக்ஸ்வெல் ரிவர்ஸ் ஸ்வீப்பாக மாற்ற முயன்றபோது காற்றில் பாய்ந்து பிடித்து மிரட்டினார்.
இதன் மூலம் மேக்ஸ்வெல், 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த அவர் பெவிலியன் திரும்பினார்.மேக்ஸ்வெல் விக்கெட்டுடன், துஷான் ஹேமந்தா 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். முன்னதாக, துஷ்மந்த சாமீராவின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 18 ரன்களில் இருந்தபோது deep பகுதியில் நிஸ்ஸங்கா ஒரு எளிதான கேட்சை தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பிறகு, ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை பெரும் சரிவை சந்தித்தது. முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, ஒன்பதாவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் குவித்து அபாரமான தொடக்கத்தை அளித்தது. ஆனால், டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் அரைசதங்கள் அடித்தபின் விரைவில் ஆட்டமிழக்க, அணி 130 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
மேக்ஸ்வெல் விக்கெட்டுக்கு பின்னர், ஆஸ்திரேலியா 16.1 ஓவர்களில் 160 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் மோசமான நிலையை அடைந்தது. 174 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளில் இருந்து, வெறும் 13 பந்துகளுக்குள் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது, இது அணியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
முந்தைய போட்டியில் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சியளிக்கும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணிக்கு, இப்போட்டி வாழ்வா சாவா போன்றது. ஃபில்டிங்கில் நிசாங்கா பிடித்த கேட்ச் போட்டியின் போக்கையே மாற்றியது என்றும், இந்த டி20 உலககோப்பையில் சிறந்த கேட்ச் இது தான் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் பேட்டிங்கில் நிசாங்கா 52 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன் மூலம் டி20 உலககோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஏதுவும் செய்யாமல் கொண்டாடப்படும் நிலையில், நிசாங்காவை ரசிகரிகள் பெரிய அளவு கொண்டாடுவது இல்லை என்றும், அவர் ஒரு அண்டர்ரேட்டட் வீரராகவே வலம் வருகிறார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.