கொழும்பு: டி20 உலககோப்பை 2026 தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேற போகிறது. இனி ஜிம்பாப்வே அணி அயர்லாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், ஒரு வெற்றியை பெற்றால் கூட ஆஸ்திரேலியாவின் கதை முடிந்துவிடும்.
இந்த முக்கியமான ஆட்டத்தில், டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஆஸ்திரேலியாவுக்கு இந்தப் போட்டி கட்டாய வெற்றிப் போட்டியாக அமைந்தது. இதற்கு காரணம், ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்திருந்தது.

எனவே, மற்ற போட்டிகளின் முடிவுகளை சார்ந்திராமல் நேரடியாக அடுத்த சுற்றுக்குச் செல்ல, இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிரான எஞ்சிய லீக் போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம் என்ற நெருக்கடியில் ஆஸ்திரேலியா களமிறங்கியது.ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் 27 பந்துகளிலும், மிட்செல் மார்ஷ் 25 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவு செய்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
இருப்பினும், இலங்கை அணியின் டூஷன் ஹேமந்தா இந்த இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நடுவரிசையில் இங்கிலிஸ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இலங்கை அணியின் சேஸிங்கின் போது பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் அபாரமாக ஆடினர். குசல் மெண்டிஸ் 35 பந்துகளில் அரைசதத்தை எட்ட, பதும் நிசங்காவும் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 11.2 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் இருந்தது.
இரண்டாவது விக்கெட்டுக்கு மெண்டிஸ் மற்றும் நிசங்கா இணைந்து 97 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், குசல் மெண்டிஸ் 51 ரன்கள் எடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரத்னாயக்காவும் நிசங்காவுடன் இணைந்து அதிரடி காட்டினார். இவர்கள் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டினர். 14.6 ஓவர் முடிவில் இலங்கை 141/2 ரன்கள் எடுத்திருந்தது.
இலங்கை வெற்றிக்கு 6 ஓவர்களில் 61 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இலங்கை வீரர் பதும் நிசங்கா தொடர்ந்து சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் அடித்ததால், வெற்றிக்கு தேவையான மளமளவென குறைந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசாங்கா 52 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இதன் மூலம் டி20 உலககோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், 6 புள்ளிகள் பெற்ற இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற, ஆஸ்திரேலியாவின் விதி ஜிம்பாப்வே கையில் இருக்கிறது.