கல்லே: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனது 36வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 254 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். அலெக்ஸ் கேரியுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஒரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து இருந்தார்.

இரண்டாவது போட்டியிலும் 131 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் சதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 259 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 11 வீரர்களுடன் 200 ரன்கள் கூட்டணி அமைத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 10 வீரர்களுடன் இணைந்து 200 ரன்களுக்கும் அதிகமான கூட்டணியை அமைத்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை நெருங்கி வருகிறார்.
ரிக்கி பாண்டிங் 41 டெஸ்ட் சதங்களுடன் ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் தற்போது 36 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கல்லேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 414 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி தடுமாறியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 211 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இலங்கை அணி 54 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. நான்காம் நாள் அன்று ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.