கல்லே: ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ட்ராவிஸ் ஹெட் டி20 ஆட்டத்தை அடி அதிர வைத்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் முதல் 14 ஓவர்களில் இலங்கை அணி திணறியது.
இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக ட்ராவிஸ் ஹெட் ஆடினார். அவர் இதற்கு முன் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே துவக்க வீரராக விளையாடி இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாம் வரிசையில் விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் முதன்முறையாக துவக்க வீரராக களம் இறங்கினார். இலங்கையில் பெரும்பாலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அங்கு நடக்கும் டெஸ்ட் போட்டிகள் மிகவும் மந்தமாகவே இருக்கும்.
அங்கு அதிரடியாக ரன் குவிப்பது என்பது அரிய நிகழ்வாகவே இருக்கும். ஆனால், ட்ராவிஸ் ஹெட் துவக்க வீரராக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். முதல் ஓவரிலேயே மூன்று ஃபோர் அடித்தார். முதல் ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் சேர்த்தது. மறுபுறம் உஸ்மான் கவாஜா வழக்கம்போல நிதான ஆட்டம் ஆடினார்.
ஆனால், தனக்கு ஒரு ஓவர் கிடைத்தால் அதில் சரமாரியாக பவுண்டரிகளை அடித்து தள்ளினார் ட்ராவிஸ் ஹெட். முதல் ஓவரை போலவே ஐந்தாவது ஓவரிலும் மூன்று ஃபோர் அடித்தார். தொடர்ந்து ஃபோர், சிக்ஸ் என வெளுத்து கட்டிய ட்ராவிஸ் ஹெட் 14.3 ஓவரில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் 40 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இருந்தார். பத்து ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் 42 ஆக இருந்தது. இலங்கை மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஒன்றில் இத்தனை அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் ட்ராவிஸ் ஹெட் ஆடியது இலங்கை அணியை கதிகலங்க வைக்கும் சம்பவமாக இருந்தது.
அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் அதன் பின் ஐபிஎல் தொடர் ஆகியவை நடைபெற இருக்கும் நிலையில் ட்ராவிஸ் ஹெட் இந்த டெஸ்ட் தொடரை அந்த தொடர்களுக்கான ஒரு பயிற்சி களமாகத்தான் பயன்படுத்துகிறார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய டெஸ்ட் தொடரிலும் ட்ராவிஸ் ஹெட் இரண்டு சதங்களை அடித்து இந்திய அணி தொடரை இழக்க முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.