டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்ததால், பயிற்சியாளர்களிடம் கோபமடைந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால், கவுரவ வெற்றிக்காக பாடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த இரு அணிகளுக்கு இடையே ரைவல்ரி இருப்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இந்த போட்டியில் ஷகிப் அல் ஹசன் வீசிய 24வது ஓவரின் முதல் பந்தில் இலங்கை அணியின் சமரவிக்ரமா 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து இலங்கை அணியின் சீனியர் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால் அவர் களமிறங்கும் போது ஹெல்மட் பட்டை அறுந்திருந்தது தெரிய வந்தது. இதனால் மாற்று ஹெல்மட்டை கொண்டு வருமாறு சக அணியினருக்கு உடனடியாக சிக்னல் கொடுத்தார். இதனால் வங்கதேச வீரர்கள் அடுத்த பந்தை வீச காத்திருக்க வேண்டியிருந்தது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் டைம் அவுட் அப்பீல் கோரினார். எம்சிசி விதிமுறையின் படி எந்தவொரு ஆட்டமிழந்து வெளியேறினாலும், அடுத்ததாக களமிறங்கும் வீரர் 3 நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ள க்ரீஸில் இருகக் வேண்டும். மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் க்ரீஸிற்கு பேட்டிங் செய்ய வராததால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்து வெளியேற்றினர். இதனால் நடுவர்கள் மற்றும் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் இரு தரப்பினரிடமும் மேத்யூஸ் மீண்டும் மீண்டும் முறையிட்டார்.

ஆனால் மேத்யூஸின் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்து வெளியேற்றினர். இதனால் கோபமடைந்த மேத்யூஸ், களத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். இதனால் அந்த ஹெல்மட்டை பவுண்டரி லைனை கடந்த பின் தூக்கி எறிந்து உள்ளே நடந்து சென்ற அவர், பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டிடம் கொந்தளித்தார். வங்கதேச அணி தரப்பில் ஒரு வார்னிங் கூட கொடுக்கவில்லை என்று மேத்யூஸ் முறையிட்டதாக வர்ணனையாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.