கொழும்பு: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி. மேலும், டெஸ்ட் தொடரையும் 1 - 0 என வென்றது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. இந்தத் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. கொழும்பு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் முஷ்ஃபிகுர் ரஹீம் 35 ரன்களும், லிட்டன் தாஸ் 34 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் 31 ரன்களும், தைஜுல் இஸ்லாம் 33 ரன்களும் எடுத்திருந்தனர். துவக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 458 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பதும் நிசங்கா 158 ரன்களும், தினேஷ் சண்டிமால் 93 ரன்களும் எடுத்திருந்தனர். அதிரடியாக ஆடிய குசால் மென்டிஸ் 87 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார்.
211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணி மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியில் முஷ்பிகூர் ரஹீம் 26 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. வங்கதேசம் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதை அடுத்து, இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இலங்கை 1 - 0 என வென்றது.
இந்தப் போட்டியில் 158 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிசங்காவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலும் அபாரமாக ஆடி 187 ரன்கள் சேர்த்திருந்தார். இதை அடுத்து அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.