கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வீரர் நசும் அஹ்மத் அடித்த பந்தை இலங்கை வீரர் பவுண்டரி எல்லை அருகே தாவிக் குதித்து கேட்ச் பிடித்தார்.
ஆனாலும், அதை சிக்ஸ் எனக் கூறினார் அம்பயர். ஆனால், தொலைக்காட்சியில் இதைக் கண்ட ரசிகர்கள் இது எப்படி சிக்ஸ் என குழப்பத்தில் ஆழ்ந்தனர். என்ன நடந்தது?

தோல்வி : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதின. தன் முதல் போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.
டாஸ் வெற்றி : இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகும் என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
தோல்வி விளிம்பில் : முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 257 ரன்கள் குவித்தது. சமரவிக்ரமா அதிரடி ஆட்டம் ஆடி 93 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 46.1 ஓவரில் 9 விக்கெட்கள் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விக்கு அருகே இருந்தது.
என்ன செய்தார்? : அப்போது பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாசன், நசும் ரன் சேர்க்க போராடினர். ஒரு கட்டத்தில் 16 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் நசும் சிக்ஸ் அடிக்க முயன்றார். பந்து பவுண்டரி எல்லையை தாண்டினாலும், இலங்கை வீரர் தீக்ஷனா பந்தை தாவிக் குதித்து உள்ளே தூக்கி வீசி, பின் மீண்டும் பந்தை பிடித்தார்.
சிக்ஸ் என்ற அம்பயர் : இது போன்ற கேட்ச்களை அதிகமாக பார்த்து விட்டதால், இது எப்படியும் கேட்ச் தான் என இலங்கை ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். போட்டியில் வெற்றி என இலங்கையும் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், மூன்றாவது அம்பயர் இதை சிக்ஸ் என அறிவித்தார்.
ஐசிசி விதி : இது எப்படி சிக்ஸ் என்றால், ஐசிசி கிரிக்கெட் விதிப்படி ஒரு வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே தாவிக் குதித்து பந்தை தொட்டால், அவர் எல்லைக்கு வெளியே செல்லும் முன் காலை எங்கே வைத்து இருந்தாரோ அங்கே அவர் நிற்பதாக கணக்கில் கொண்டே அது சிக்ஸா அல்லது கேட்ச்சா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இதுதான் நடந்தது : அதன்படி, தீக்ஷனா எல்லைக்கு வெளியே எகிறிக் குதிக்கும் முன் பவுண்டரி எல்லையில் அவரது கால் பட்டது. அங்கே இருந்து தான் அவர் குதித்தார். அதனால், அவர் எல்லைக்கு மேல் நிற்பதாக கணக்கில் கொண்டு அப்போது அவர் பந்தை பிடித்ததால் அது சிக்ஸ் என அறிவித்து இருக்கிறார் அம்பயர். அடுத்த சில பந்துகளில் நசும் ஆட்டமிழக்க இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.