கொழும்பு: இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் இங்கிலாந்து அணி இம்முறை இலங்கையை அவர்களின் பாணியிலேயே வீழ்த்தத் திட்டமிட்டது. இங்கிலாந்து அணியில் மொத்தம் 8 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதில் 6 பேர் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 40.3 ஓவர்கள் வீசி புதிய சாதனை படைத்தனர். இவர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர். சரித் அசலங்கா 45 ரன்களும், தனஞ்சய டி சில்வா 40 ரன்களும் எடுத்தனர். குசல் மெண்டிஸ் 26 ரன்களில் ரன் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 49.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தபோதிலும், ஜோ ரூட் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மிகவும் நிதானமாக விளையாடிய ஜோ ரூட், 90 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 45வது அரைசதமாகும். இவருக்குத் துணையாக ஹாரி புரூக் 42 ரன்கள் சேர்த்தார்.
கடைசி நேரத்தில் ஜோ ரூட் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இங்கிலாந்து அணி 22 பந்துகள் மீதம் இருக்கையிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம், வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து 11 போட்டிகளாகத் தோல்வியைச் சந்தித்து வந்த இங்கிலாந்து அணி, அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.