பல்லேகலே: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணி இங்கிலாந்திடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து 12வது வெற்றியைப் பதிவு செய்து இங்கிலாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது.
பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த குரூப் 2 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை நோக்கித் துரத்திய இலங்கை அணி 95 ரன்களுக்குச் சுருண்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால், கேப்டன் ஜோஸ் பட்லர் 7 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், தொடக்க வீரர் பிலிப் சால்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.
இலங்கை பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளித்து ஆடிய சால்ட், 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்தார். வில் ஜாக்ஸ் 21 ரன்கள் எடுத்தார். ஹாரி ப்ரூக் (14), சாம் கரன் (11) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இலங்கை தரப்பில் இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்ஷன் மதுஷங்கா மற்றும் மகேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 146 ரன்கள் சேர்த்தது.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணியின் முன்வரிசை பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். பதும் நிசங்கா 9 ரன்கள், குசல் மெண்டிஸ் 4 ரன்கள், கமில் மிஷாரா 6 ரன்கள் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இங்கிலாந்து அணியின் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான வில் ஜாக்ஸ், இலங்கை அணியின் பேட்டிங் வரிசையை காலி செய்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் தசுன் ஷனகா மட்டும் போராடி 30 ரன்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்குச் சுருண்டது.
பந்துவீச்சில் இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டுகளையும், அதில் ரஷீத் மற்றும் லியாம் டாவ்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் இலங்கை அணி பேட்டிங்கில் முழுமையாகச் சொதப்பித் தோல்வியைத் தழுவியது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.