கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஆனால், சதத்தை விட அவர் அதைக் கொண்டாடிய விதம் தான் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) மல்யுத்தப் போட்டியில் வரும் பிரபல வீரர் 'ஸ்டோன் கோல்ட்' ஸ்டீவ் ஆஸ்டின் பாணியில் அவர் கொண்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடி ஆட்டம் ஆடினார். வெறும் 66 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், ஆட்டமிழக்காமல் 136 ரன்களைக் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 9 இமால சிக்ஸர்களும் அடங்கும். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய அவர், 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்து அடுத்த 17 பந்துகளில் சதம் விளாசினார். அதாவது 57 பந்துகளிலேயே அவர் சதம் அடித்தார்.

49வது ஓவரில் ஜெப்ரி வாண்டர்சே வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஹாரி புரூக் சதம் அடித்தார். சதம் அடித்த மகிழ்ச்சியில், அவர் தனது கையுறைகளைக் கழற்றிவிட்டு, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, கைகளை ஒன்றுடன் ஒன்று மோதச் செய்து கொண்டாடினார். இது புகழ்பெற்ற டபிள்யூ.டபிள்யூ.இ வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் செய்யும் 'பீர் பேஷ்' (Beer Bash) கொண்டாட்டமாகும். அதாவது இரண்டு பீர் கேன்களை மோதச் செய்து குடிப்பது போன்ற பாவனை இது.
ஹாரி புரூக் இப்படிச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹாரி புரூக் சர்ச்சையில் சிக்கினார். இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு 30,000 பவுண்டுகள் அபராதம் விதித்தது.
மேலும் அவரது கேப்டன் பதவியே பறிபோகும் சூழல் உருவானது. இங்கிலாந்து வீரர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது அந்த விமர்சனங்களைக் கிண்டல் செய்யும் விதமாகவே, சதம் அடித்த பிறகு 'பீர்' குடிப்பது போல சைகை காட்டி அவர் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.
ஹாரி புரூக்கின் இந்தக் கொண்டாட்டம் குறித்து சக வீரர் ஜோ ரூட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "மல்யுத்தப் போட்டிகளைப் பார்ப்பவர்களுக்கு இது என்னவென்று புரியும். ஹாரி புரூக் தனது அணியினருடன் ஜாலியாக இருக்கவே இப்படிச் செய்தார். நகைச்சுவை உணர்வுடன் அவர் இதைச் செய்தாரே தவிர, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு கேப்டனாக அவர் அழுத்தமான நேரத்திலும் அமைதியாகவும், அதேசமயம் நகைச்சுவையுடனும் இருப்பதை இது காட்டுகிறது" என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து சம்பவத்திற்குப் பிறகு கடும் விமர்சனங்களைச் சந்தித்த ஹாரி புரூக், தற்போது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் மூலம் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார். இலங்கைத் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.