துபாய்:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங் அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
ஹாங்காங்கை இலங்கை எளிதில் வீழ்த்தி விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணியில் தொடக்கவீரர் சீஸான் அலி 23 ரன்களும், அன்சி ராத் 48 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் நடுவரிசையில் களமிறங்கிய நிசாகத் கான் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன்மூலம் ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும், காமில் மிஸ்ரா 19 ரன்களிலும், குசல் பெரேரா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய நிஷாங்கா 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு கட்டத்தில் ஹாங்காங் அணியில் கை ஓங்கி இருந்தது. எனினும் நோபால் மற்றும் ஆறு கேட்ச் மிஸ் போன்ற காரணங்களால் ஹாங்காங் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் ஹசரங்கா 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து இலங்கை அணியில் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் 18.5 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. ஹாங்காங் அணி மட்டும் கேட்சை சரியாக பிடித்து இருந்தால் இந்நேரம் இலங்கை அணி தோல்வியை தழுவி இருக்கும். கத்துக்குட்டி அணிகள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இலங்கைக்கு ஹாங்காங் கடும் போட்டியை கொடுத்தது.