கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டை-யில் முடிந்தது. அதன் பின் சூப்பர் ஓவர் நடத்தப்படும் என நேரலையில் பார்த்த பல ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போட்டி டை ஆனதை அடுத்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கி பிரிந்து சென்றனர். சூப்பர் ஓவர் எதுவும் நடத்தப்படவில்லை.இது குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதி என்ன? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது.
ஏனெனில், இதற்கு முன் ஒரு நாள் போட்டிகள் டை-யில் முடிந்த போது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இப்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் ஏன் சூப்பர் ஓவர் நடத்தப்படவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சூப்பர் ஓவர் விதிகளின் படி எந்த ஒரு டி20 போட்டி டை-யில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், 50 ஓவர் போட்டிகளுக்கு அப்படி எந்த விதிமுறையும் இல்லை. ஒவ்வொரு தொடருக்கும் சூப்பர் ஓவர் தொடர்பான விதிகளை அந்த தொடரை நடத்தும் நாடு அல்லது அமைப்பு முடிவு செய்து கொள்ளலாம்.
இந்தியா மற்றும் இலங்கை ஆடிவரும் இந்த ஒரு நாள் தொடரில் அது போன்ற விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே போட்டி டை ஆனால் அத்துடன் போட்டி முடிவுக்கு வந்துவிடும். அதுதான் இப்போதும் நடந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் டை ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இதுவரை இருந்துள்ளது.
2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். அத்துடன் சேர்த்து இதுவரை மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டுமே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு இருக்கிறது. 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதி போட்டி, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த 2020 ஒருநாள் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே 2023 இல் நடந்த உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி ஆகிய மூன்று போட்டிகள் டை ஆன போது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.