கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமாக விளையாடி உள்ளது. முதல் போட்டியை டை செய்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்யும் விஷப்பரிட்சை தான் காரணம் என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக மிடில் ஆர்டரில் அவர் செய்யும் மாற்றங்கள் இந்திய அணியின் பேட்டிங்கை கடுமையாக பாதித்து இருப்பதாக ரசிகர்கள் சுட்டிகாட்டுகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் நான்காம் வரிசையில் ஆட வைக்கப்பட்டார்.

அதனால், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் சற்று பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்காம் வரிசையில் சிவம் துபேவும், ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேலும் பேட்டிங் செய்தனர். அதனால் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆறாவது மற்றும் ஏழாவது வரிசையில் பேட்டிங் இறங்கினர்.
அப்படி பின்தங்கிய நிலையில் பேட்டிங் ஆடுவதில் அவர்களுக்கு சிரமம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதற்கு முன் ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் நான்கு அல்லது ஐந்தாம் வரிசையில் மட்டுமே பேட்டிங் செய்து வந்தனர்.
ஆனால், தற்போது இடது கை - வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் ஆடுகளத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பேட்டிங் வரிசையில் அதிக மாற்றங்களை செய்கிறார் கம்பீர். அது பேட்ஸ்மேன்களின் அணுகு முறையில் குழப்பத்தை ஏற்படுத்தி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை சுட்டிக் காட்டும் ரசிகர்கள், கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர், இந்திய அணியையும் ஒரு ஐபிஎல் அணி என நினைத்துக் கொண்டார் போல என விளாசி உள்ளனர். "இந்திய அணி ஒரு ஐபிஎல் அணி அல்ல, இந்தியா விளையாடி வருவது ஐபிஎல் தொடரும் அல்ல. இங்கே ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதை கவுதம் கம்பீர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். விஷப்பரிட்சைகளை எல்லாம் தொடரை கைப்பற்றிய பின் மீதம் இருக்கும் போட்டிகளில் மட்டுமே செய்ய வேண்டும்" என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.