மும்பை: 2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லவும் திட்டமிட்டு வந்தது. இதனிடையே புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் தான் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில் கவுதம் கம்பீர் பதவி ஏற்றவுடன் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்துள்ளது.
27 ஆண்டு காலத்தில் இதுவரை ஒரு முறை கூட இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால், இந்த முறை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், இந்திய அணி தொடரை 2 - 0 என்ற கணக்கில் இழந்து இருக்கிறது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்திய அணி எப்படி ஜெயிக்கப் போகிறது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கை தொடரில் ஏற்பட்ட தோல்வி என்பது முழு பலத்துடன் இந்திய அணி விளையாடாததால் ஏற்பட்ட தோல்வி அல்ல. மாறாக, பல விஷப்பரிட்சைகளை தொடர்ந்து செய்ததால் ஏற்பட்ட தோல்வி. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியை தன் மனம் போன போக்கிற்கு மாற்ற முயற்சி செய்ததால் ஏற்பட்ட தோல்வி.
இனி இந்திய அணியில் நிலையான பேட்டிங் வரிசை இருக்கக் கூடாது என நினைக்கிறார் கவுதம் கம்பீர். அதாவது ஒரு பேட்ஸ்மேன் எந்த ஒரு இடத்திலும் பேட்டிங் செய்ய வேண்டும்.. தான் நான்காம் வரிசையில் தான் இறங்குவேன், ஐந்தாம் வரிசையில் தான் இறங்குவேன் என எந்த பேட்ஸ்மேனும் சொல்லக்கூடாது என நினைக்கிறார் கவுதம் கம்பீர்.
அதேபோல பந்து வீச்சில் நான்கு அல்லது ஐந்து முழு நேர பந்து வீச்சாளர்களும், ஒன்று அல்லது இரண்டு ஆல் ரவுண்டர்களும் இருந்தால் போதும் என்ற நிலை இனி இருக்கக்கூடாது என நினைக்கிறார் கவுதம் கம்பீர். அதனால், இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பந்து வீச வேண்டும் என கட்டாயப் படுத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை சுப்மன் கில், ரோஹித் சர்மா, ரியான் பராக் போன்றவர்கள் பந்து வீசி உள்ளனர்.
தனது ஹைபிரிட் மாடல் பேட்டிங் மற்றும் பவுலிங்கை செயல்படுத்தி பார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சியாக இந்த தொடரை கவுதம் கம்பீர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே, இந்தத் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் டை செய்தும், இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் 110 வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது.
இதன் மூலம் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கை உடைய வாய்ப்பு உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ளது. இடையில் இன்னும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும். இந்த நிலையில், இந்திய வீரர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? என்பதை கம்பீர் கவனிக்கத் தவறிவிட்டார்.