ஆன்டிகுவா : நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணியுடன் தோல்வியடைந்த இலங்கை அணி, குரூப் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அடுத்தடுத்த லீக் போட்டிகளில் ரசிகர்களின் பெருமைக்காக விளையாடுவோம் என்று இலங்கை அணி வீரர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் எட்வர்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் குசால் மெண்டிஸ் மற்றும் அசலங்கா இருவரும் அதிரடியில் பொளந்து கட்டினர். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய மெண்டிஸ் 46 ரன்களும், அசலங்கா 46 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி நேரத்தில் வந்த மேத்யூஸ் 15 பந்துகளில் 30 ரன்களும், ஹசரங்கா 6 பந்துகளில் 20 ரன்களும் விளாசினர். இதனால் 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு லிவித் - மேக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் அதிரடியாக தொடங்கி முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில், தீக்சனா பவுலிங்கில் லிவித் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் நெதர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டை போல் சரிந்தனர். மேக்ஸ் 11 ரன்களிலும், விக்ரம்ஜீத் சிங் 7 ரன்களிலும், ஏங்கல்பிரட் 11 ரன்களிலும், பேஸ் டீ லீட் 3 ரன்களிலும், வான் பீக் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் 100 ரன்களையாவது நெதர்லாந்து அணி எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. பின்னர் கேப்டன் எட்வர்ட்ஸ் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இலங்கை அணி தரப்பில் துஷாரா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா மற்றும் பதிரானா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலமாக இலங்கை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியுடன் இலங்கை அணியின் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.