NZ vs SL - 6 நாட்கள் நடந்த டெஸ்டில் இலங்கை அபார வெற்றி.. நியூசிலாந்து கனவுக்கு விழுந்த அடி
காலே : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு நாள் இடையில் வழங்கப்பட்டது.
இதனால் இந்த டெஸ்ட் போட்டி வழக்கத்திற்கு மாறாக ஐந்து நாட்களுக்குப் பதில் ஆறு நாட்கள் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இலங்கையில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றதால், இந்த ஓய்வு நாள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதலில் 35 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 340 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 35 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடியது. தொடக்க வீரர் நிஷாங்கா இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க கருணரத்னே 83 ரன்களும், சந்திமால் 61 ரன்களும் எடுத்தனர்.
அந்த அணியின் அனுபவ வீரரான மேத்யூஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமெண்டு மெண்டீஸ் 13 ரன்களில் வெளியேற கேப்டன் தனஞ்செய்ய டி சில்வா 40 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் அஜஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதை அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் டாம் லாத்தம் 28 ரன்களில் ஆட்டம் இழக்க சிஎஸ்கே வீரர் கான்வே 4 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 30 ரன்களிலும், டேரல் மிட்செல் எட்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
எனினும் தனி ஆளாக நின்று சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா போராடி ரன்களை சேர்த்தார். 168 பந்துகளை எதிர்கொண்ட அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதே போன்று டாம் பிளாண்டல் 30 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் கடைசி நாளான இன்று நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை அணியின் வெற்றிக்கு இரண்டு விக்கெட் தேவைப்பட்டது.
இதனால் இந்த போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தில் இருந்தது. ஆனால் இலங்கை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் நியூசிலாந்து அணி கடைசி நாளான இன்று வெறும் இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இலங்கை அபார வெற்றி பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து இலங்கை தற்போது 50 புள்ளி வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.
இலங்கைக்கு எதிரான தோல்வி அடைந்து மூன்றாம் இடத்தில் இருந்த நியூஸிலாந்து அணி தற்போது 42.85% நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு நியூசிலாந்துக்கு கடினமாக இருக்கிறது. அதே சமயம் இலங்கை அணிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக தான் இருக்கிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மீண்டும் மோத ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications