பல்லேகேலே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்று சாதனை படைத்தது. சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இலங்கை அணிக்கு இது ஆறாவது இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றி ஆகும்.
மேலும், சொந்த மண்ணில் நடந்த கடைசி பத்து இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களை வென்று இருக்கிறது.

கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் ஐந்து இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இலங்கை வென்று இருந்தது. அந்த வகையில் இலங்கை அணி மாபெரும் சாதனை வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்த தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
நேற்று நடந்த இரண்டாவது போட்டி மழையால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் மார்க் சாப்மேன் 76 ரன்கள் எடுத்து இருந்தார். விக்கெட் கீப்பர் மிட்ச் ஹே 49 ரன்கள் எடுத்து இருந்தார்.
துவக்க வீரர் வில் யங் 26 ரன்கள் எடுத்து இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷனா மற்றும் வான்டர்சே தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்களும், வெல்லாலகே மற்றும் அசலங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து இலங்கை அணி 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் இலங்கை தட்டுத்தடுமாறி இலக்கை நோக்கி நகர்ந்தது. பதும் நிசங்கா 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
மூன்றாம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் கடைசி வரை களத்தில் நின்று இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டம் இழந்து வந்தனர். இந்த நிலையில் ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேன் மகீஷ் தீக்ஷனா 44 பந்துகளை சந்தித்து 27 ரன்கள் எடுத்து குசால் மெண்டிஸ்-க்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இதை அடுத்து இலங்கை அணி 46 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி வரை நின்று ஆடிய குசால் மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்து இருந்தார். நியூசிலாந்தின் பந்து வீச்சில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
கேப்டன் மிட்செல் சான்ட்னர் 10 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். கிளென் பிலிப்ஸ் மற்றும் நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்த தொடரில் மூன்று போட்டிகள் இருக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது இலங்கை அணி.