காலே: இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக பணியாற்றி வரும் அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னுல் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இலங்கை அணியின் செயல்பாடுகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது, அதன்பின் இங்கிலாந்து மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது, தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை எளிதாக சாய்த்து அசத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக காலே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கைப்பற்றியுள்ளது.
இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் புள்ளிப் பட்டியல் தலைகீழாக மாறியுள்ளது. 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 7வது இடத்திற்கு சரிந்த நிலையில், திடீரென இலங்கை அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொதப்பினால், இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்புகள் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணியில் இருந்து அடுத்த சூப்பர் ஸ்டார் வீரர்கள் உருவாகியுள்ளனர். பிரபாத் ஜெயசூர்யா, கமிண்டு மெண்டிஸ், நிசாங்கா, அஹிதா ஃபெர்னாண்டோ, ரத்நாயகே, நிஷான் பெய்ரிஸ் என்று ஏராளமான இளம் வீரர்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். இதற்கு இலங்கை அணியின் பயிற்சியாளர் ஜெயசூர்யா முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
ஏனென்றால் தவழ்ந்து கிடந்த இலங்கை அணியை அசால்ட்டாக 2 மாதங்களில் எழுந்து விரைவாக ஓட வைத்துள்ளார். ஒவ்வொரு போட்டியின் போதும் ஜெயசூர்யா ஓய்வறையில் எழுந்து நின்று, வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி கொண்டே இருப்பார். இதன் மூலமாக இலங்கை அணி வீரர்கள் அனைவரும் வெற்றிக்காக விளையாட தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிற்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சியான பரிசை அளித்துள்ளது. இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை வாரியத் தலைவர் ஆஷ்லே பேசுகையில், ஜெயசூர்யாவுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது இலங்கை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.