டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 42 ரன்களில் சுருண்டு இருப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
பயிற்சியாளர் ஜெயசூர்யா தலைமையில் இலங்கை அணி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கை அணி முதல் டெஸ்டில் செம அடி வாங்கி இருக்கிறது. டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் பெவுமா மட்டும் அபாரமாக விளையாடி 70 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவரில் 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் அசிதா பெர்னாண்டோ மூன்று விக்கெட்டுகளும், லகிரோ குமாரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. யாருமே எதிர்பாக்காத வகையில் தென்ஆப்பிரிக்கா வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் கடுமையாக தடுமாறினர். வந்த வேகத்தில் அனைவரும் பெவிலியன் நோக்கி சென்றனர். இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.
குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கோ ஜான்சன் அபாரமாக பந்து வீசி இலங்கை விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். 13.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட இலங்கை அணி 42 ரன்களில் சுருண்டது. இதில் இலங்கை அணியில் சந்திமால்,குசல் மெண்டிஸ்,பிரபாத் ஜெயசூர்யா, விஸ்வா பெர்னாண்டோ, அசித்தா பெர்னான்டோ ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கமிண்டோ மெண்டிஸ் மட்டும் அதிகபட்சமாக 13 ரன்கள் சேர்த்தார். மார்க்கோ ஜான்சன் 6.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ரபாடா ஒரு விக்கெட்டும், ஜெரால்ட் கோட்ஸி இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதை அடுத்து தற்போது தென்னாபிரிக்க அணி 149 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.