நியூயார்க் : டி20 உலக கோப்பையில் குரூப் டி பிரிவில் இன்று முன்னாள் சாம்பியன் ஆன இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடுகிறது. இரு பெரிய அணிகள் முதன்முறையாக மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது. நியூயார்க் மைதானத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தாங்கள் எடுத்தது மிகவும் தவறான முடிவு என்பது பிறகு தான் இலங்கை அணி வீரர்களுக்கு தெரிந்தது.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை தொடக் கூட முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர். அனல் பறக்கும் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வீசினர். இந்த பந்துகளை கணிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர்.தொடக்க வீரரான நிஷாங்கா மூன்று ரன்களிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்களிலும், கேப்டன் ஹசரங்கா, சதிரா விக்ரமா டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 45 ரன்கள் சேர்ப்பதற்குள்ளே ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கை அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூஸ் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க 16 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதேபோன்று அசலங்கா அதிரடி வீரர் சனாகா ஒன்பது ரன்களிலும் வெளியேறினர்.
சிஎஸ்கே வீரர் பதிரனா , மும்பை வீரர் துஷாரா ஆகியோர் டக் அவுட்டாக இலங்கை அணி 19 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் 77 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் ஆண்டிரிஜ் நோக்கியா 4 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் மற்றும் ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இலங்கை அணி பேட்டிங்கில் நான்கு பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். இலங்கை அணி இவ்வளவு குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.