ஹராரே: வெற்றி கிட்டத்தட்ட கைநழுவிப் போன நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கி ஆல்-ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் நிகழ்த்திய அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை, பின்னர் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சில் மிரண்டுபோய், இறுதியில் போராடி வென்றது.
ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, பிரையன் பென்னட்டின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. பென்னட் 81 ரன்கள் குவித்து இருந்தார்.

176 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, தொடக்கம் அதிரடியாக இருந்தது. ஒருநாள் தொடரில் ரன் மழை பொழிந்த பதும் நிசங்கா, இங்கேயும் தனது ஃபார்மைத் தொடர்ந்தார். பவர் ப்ளேவிலேயே இலங்கை அணி 65 ரன்களைக் குவித்தது. நிசங்கா அரைசதம் கடக்க, 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்து, இலங்கை அணி வெற்றியை எளிதாக உறுதி செய்துவிடும் என்றே தோன்றியது.
ஆனால், நிசங்கா 55 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது. அடுத்த 19 பந்துகளுக்குள் குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா என முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனால், கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஜிம்பாப்வேயின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர்.
இந்த நேரத்தில் களத்திற்குள் வந்த கமிந்து மெண்டிஸ், ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் அதிரடி ஆட்டம் ஆடினார். ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், குறிப்பாக போட்டியின் 18-வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என விளாசினார்.
அந்த ஒரே ஓவரில் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை முழுவதுமாக இலங்கையின் பக்கம் திருப்பினார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தால், தோல்வியின் பிடியிலிருந்த இலங்கை அணி மீண்டெழுந்தது. கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இருந்தார். 1 ஃபோர் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இறுதியில், 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.