கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் 24 ரன்களை விளாசி ஜிம்பாப்வே அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி இழந்த சூழலில், டி20 தொடரிலும் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் 2வது டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அசலங்கா - மேத்யூஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியை மீட்டனர். 5வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பாக ஆடிய அசலங்கா 3 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த மேத்யூஸ் 2 சிக்ஸ், 6 ஃபோர்ஸ் உட்பட 66 ரன்களை சேர்த்தார்.
இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கிரைக் எர்வின் 54 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா 8 ரன்களில் வெளியேற, ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது மதுஷங்கா வீசிய 19வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரை வீசிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேத்யூஸ் பவுலிங்கை ஜாங்வே எதிர்கொண்டார். முதல் பந்தில் சிக்சர் அடிக்கப்பட்ட நிலையில், அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, ஒரே பந்தில் ஜிம்பாப்வே அணி 11 ரன்களை சேர்த்தது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. தொடர்ந்து 2வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சர் அடிக்கப்பட, மேத்யூஸ் அரவுண்ட் தி ஸ்டம்ப் திசையில் இருந்து பவுலிங் செய்தார்.
அப்போது 4வது பந்தில் ரன்கள் சேர்க்கப்படாத நிலையில், 5வது பந்தில் ஒரு ரன் மட்டும் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவையாக இருந்தது. அப்போது ஜிம்பாப்வே அணியின் மதான்டே சிக்சர் அடிக்க, ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் 24 ரன்களை விளாசி அபார வெற்றியை பெற்றுள்ளது. சொந்த மண்ணில் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.