கல்லே: இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா விரைவில் அஸ்வினின் 11 ஆண்டு டெஸ்ட் சாதனையை முறியடிக்க இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசிய பிரபாத் ஜெயசூர்யா 18 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அவர் 16 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் நிலையில் தனது 9 வது ஐந்து விக்கெட் ஹால் சாதனையை படைத்தார். மேலும், அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் முடிவில் டெஸ்ட் போட்டிகளில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை பெற்று இருந்தால் உலக அளவில் மிக விரைவாக 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்து இருப்பார்.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்கள் வேகமாக விக்கெட்களை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஜெயசூர்யா அதில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார். மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் அவரே வீழ்த்துவது என்பது கடினமான காரியம் ஆகும்.
ஒருவேளை பிரபாத் ஜெயசூர்யா தனது 17 வது போட்டியில் 100 விக்கெட் என்ற மைல் கல் சாதனையை எட்டினால் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்துவார். கடந்த 2013ஆம் ஆண்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். அதன் மூலம், உலக அளவில் விரைவாக 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் அஸ்வின்.
மேலும், இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார். தற்போது ஜெயசூர்யா அந்த சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 1896 இல் இங்கிலாந்து அணியின் ஜார்ஜ் லோமென் 16 போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை இதுவரை எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்க முடியவில்லை.
நான்கு பந்துவீச்சாளர்கள் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளனர். அந்த பட்டியலில் ஐந்தாவதாக ஜெயசூர்யா சேர வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவின் சார்லஸ் டர்னர், இங்கிலாந்து அணியின் சிட்னி பர்னஸ், ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட், பாகிஸ்தானின் யாசிர் ஷா ஆகிய நால்வரும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.