ராஞ்சி : சையது முஷ்டாக் அலி ட்ராபி டி20 தொடரில் பஞ்சாப் அணி ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இரண்டு சாதனைகளை உடைத்து எறிந்தது.
இதுவரை பெங்களூர் அணி 263 ரன்கள் அடித்து இருந்ததே இந்திய டி20 அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆனால், அதை உடைத்துள்ள பஞ்சாப் அணி 275 ரன்கள் குவித்தது.
மேலும், ஆர்சிபி அணி அதே போட்டியில் 21 சிக்ஸ் அடித்ததே இந்திய டி20அணி ஒரே போட்டியில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். ஆனால், அதையும் முறியடித்துள்ள பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் 22 சிக்ஸர்கள் அடித்துள்ளது.
இந்த டி20 போட்டியில் பஞ்சாப் அணியின் அபிஷேக் சர்மா 51 பந்துகளில் 112 ரன்களும், அன்மோல் ப்ரீத் சிங் 26 பந்துகளில் 87 ரன்களும் எடுத்து ஆந்திரா அணியை பதறவைத்தனர்.
ஆந்திரா அணியில் ஐந்தே ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். மாற்று பந்துவீச்சாளர்கள் யாருமே இல்லாததால் குறிப்பிட்ட பந்துவீச்சாளர் ஓவரில் ரன் அதிகமாக அடிப்பார்கள் என்று தெரிந்தும் வேறு வழியின்றி பந்து வீச வைத்தது ஆந்திரா.

அதன் காரணமாக, பஞ்சாப் வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி 20 ஓவர்களில் 275 ரன்கள் குவித்தனர். போட்டியில் என்ன நடந்தது என விரிவாக பார்ப்போம்.
பிசிசிஐ நடத்தும் மாநில அணிகளுக்கு இடையேயான சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் - ஆந்திரா இடையே ஆன கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் சிங் முதல் சில ஓவர்களில் டி20 போட்டிக்கு உரிய வேகத்தில், ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தனர்.
பிரப்சிம்ரன் சிங் 21 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் அதிரடிக்கு மாறினார் அபிஷேக் சர்மா. அடுத்து வந்த நமன் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் அதிரடி வீரர் அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் 13வது ஓவரில் இருந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனர். ஆந்திரா அணியின் எந்த பந்துவீச்சாளரும் சரியில்லை என்பதை உணர்ந்த அந்த ஜோடி ஓவருக்கு 20 ரன்கள் என்ற இலக்கோடு பவுண்டரிகளாக அடிக்கத் துவங்கியது.
அபிஷேக் சர்மா 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 ஃபோர் 9 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் சென்ற பின் இன்னும் வேகம் எடுத்த அன்மோல் 6 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து 26 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் விக்கெட்களை இழந்தாலும் சன்வீர் சிங் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்ததால் இன்னும் அதிக ரன்களை சேர்த்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்து இருந்தது.
அடுத்து ஆடிய ஆந்திரா, பஞ்சாப் அணிக்கு கொஞ்சம் கூட ஈடு கொடுத்து ஆடாமல் படுதோல்வி அடைந்தது. ஆந்திரா அணியில் ரிக்கி பூயி மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடி 52 பந்துகளில் 104 ரன்கள் குவித்து சதம் கடந்து ஆறுதல் அளித்தார். பஞ்சாப் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.