இந்தூர் : சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் சிக்கிம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறது. நடப்பு சையது முஸ்தாக் அலி தொடரில் பரோடா அணி விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பலமான அணியாக விளங்கியது
இந்த நிலையில் சிக்கிம் போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய தொடக்க வீரர் ஷசாவத் ராவத் 16 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், நான்கு இமாலய சிக்சர்களும் அடங்கும்

மற்றொரு தொடக்க வீரரான அபிமன்யுசிங் 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் 5 சிக்சர், நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவரிலேயே 92 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து மூன்றாவது வீரராக களம் இறங்கிய பனு பாணியா, சிக்கிம் பந்து வீச்சை சின்னாபின்னமாக ஆக்கினார்.
மைதானத்தின் நான்கு பகுதிகளிலும் பனு பாணியா சிதறடித்தார். இதனால் 51 பந்துகளில் 134 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 15 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகள் அடங்கும். இறுதியில் சிவலிங் சர்மா 17 பந்துகளில் 55 ரன்கள் குவிக்க, சோலங்கி 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் பரோடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை பரோடா படைத்திருக்கிறது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் கம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது இதனை பரோடா அணி முறியடித்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் கம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஒரே இன்னிங்ஸில் 27 சிக்ஸர்கள் அடித்து இருந்தது சாதனையாக இருந்தது. தற்போது பரோடா அணி ஒரே இன்னிங்சில் 37 சிக்ஸர்கள் விளாசி அந்த சாதனையும் முறியடித்திருக்கிறது.
பரோடா அணியின் இந்த சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் சிக்கிம் அணியில் ரோஷன் குமார் என்ற வீரர் நான்கு ஓவர்கள் வீசி எண்பத்தி ஒரு ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் பரோடா அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிக்கிம் அணி வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ராபின் லிம்போ என்ற வீரர் 20 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.