ஐதராபாத் : சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் களமிறங்கிய சிஎஸ்கேவின் அதிரடி வீரர் சிவம் துபே 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். சர்வீசஸ் அணிக்கு எதிரான குரூப் இ லீக் ஆட்டத்தில் மும்பை அணி களம் இறங்கியது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சர்வீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் பிரித்விஷா டக் அவுட்டாகி வெளியேற ரஹானே 18 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார்.

பஞ்சாப் அணியால் 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சில நாள் ஓய்வுக்குப் பிறகு தற்போது இந்த தொடரில் களமிறங்கி அதிரடியை காட்டினார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஏழு பவுண்டரி, நான்கு சிக்சர் என 70 ரன்கள் குவித்தார்.
ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சிஎஸ்கே வீரர் சிவம் துபே தான். சர்வீசஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிவம்துபே சிதறடித்தார். சிவம் துபே கடந்த ஐபிஎல் சீசனில் பெரிய அளவில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அவர் செம பார்மில் இருக்கிறார்.
இதற்கு காரணம் சிஎஸ்கே அணி சிவம் துபேவை நம்பி ஏலத்தில் தக்க வைத்தது தான். சிக்ஸரை அடிக்கும் இயந்திரம் போல் ஏழு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என 37 பந்துகளில் அவர் 71 ரன்கள் குவித்தார். இதில் சிவம் துபே ஸ்ட்ரைக்ரேட் 191 என்ற அளவில் இருந்தது. இதனால் மும்பை அணி 20 முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.
இதை அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய சர்வீசஸ் அணி 19.3 ஓவரில் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் ஐபிஎல் மெகா ஏலத்தில் விலை போகாத சர்துல் தாக்கூர் அபாரமாக செயல்பட்டு நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிவம் துபே 3 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.