சென்னை : தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தற்போது ஏலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட விஜய் சங்கர்,சையது முஸ்தாக் அலி தொடரில் முக்கிய ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணிக்காக 12 ஒரு நாள் மற்றும் 9 t20 போட்டிகளில் விளையாடியவர் விஜய் சங்கர். இந்திய அணிக்காக 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட விஜய் சங்கர் இடம் பிடித்திருக்கிறார். அஸ்வின், தினேஷ் கார்த்திக், பத்ரிநாத் ஆகியோருக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த முக்கியமான தமிழக கிரிக்கெட் வீரராக விஜய் சங்கர் திகழ்ந்தார்.

இந்த தருணத்தில் விஜய் சங்கருக்கு காயம் மற்றும் போதிய வாய்ப்பு கிடைக்காததால் இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து விஜய் சங்கர் அபாரமாக விளையாடி வந்தார். தமிழ்நாடு அணியின் கேப்டனாகவும் விஜய் சங்கர் இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட விஜய் சங்கர் கடந்த 2023 ஆம் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 301 ரன்கள் குவித்தார்.
இதில் மூன்று அரை சதம் அடங்கும். இதன் மூலம் மீண்டும் விஜய் சங்கர் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார். இந்த சூழலில் 33 வயதான விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 சீசனில் ஏலத்தில் எடுத்திருக்கிறது. பொதுவாக சிஎஸ்கே வீரர்களுக்கு தமிழக கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய முக்கியத்துவம் தரப்படும். ஆனால் விஜய் சங்கர் நடப்பு சையது முஸ்தாக் அலி தொடரில் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் சங்கர் அண்மையில் பரோடா அணிக்கு எதிராக 42 ரன்கள் அதிரடியாக குவித்த நிலையில் குஜராத்துக்கு எதிராக மூன்று ரன்களும், கர்நாடகாவுக்கு எதிராக டக்கவுட்டும் ஆனார். இந்த சூழலில் பந்து வீசிய மூன்று இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் விஜய சங்கர் வீழ்த்தினார்.
தமிழக அணியின் முக்கிய வீரராக விஜய் சங்கர் இருந்த நிலையில், அவரை கேப்டன் ஷாருக்கான் அதிரடியாக நீக்கி இருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தருணத்தில் விஜய் சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என்று ஸ்டோரி வைத்திருந்தார். சிஎஸ்கே வின் புதிய வீரரை தமிழக அணி முக்கிய ஆட்டத்தில் இருந்து நீக்கி இருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.