மும்பை: 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி டி20 தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று இருக்கும் பிரித்வி ஷா ஐந்து போட்டிகளில் இரண்டாவது முறையாக டக் அவுட் ஆனார். முன்னதாக அவர் அதிக எடை இருப்பதால் ரஞ்சி ட்ராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.
தற்போது மும்பை மாநில டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதிலும் அவர் சொதப்பி இருக்கிறார். இதுவரை 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 33, 0, 23, 40, 0 என்ற ஸ்கோர்களை எடுத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்திலும் எந்த அணியும் பிரித்வி ஷாவை வாங்கவில்லை.

அவரை அனைத்து ஐபிஎல் அணிகளும் புறக்கணித்து இருந்தன. ஒரு காலத்தில் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என புகழப்பட்டு வந்த பிரித்வி ஷா மிகச் சில ஆண்டுகளிலேயே தனது கிரிக்கெட் வாழ்வின் முடிவை எட்டி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் அவரது உடல் எடையில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாக மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பு நடத்திய பரிசோதனையில் தெரியவந்தது. எனவே, அவரை போட்டிகளில் விளையாட அனுமதிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு இடையே தான் அவருக்கு 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பிலும் அவர் சொதப்பி இருப்பதால் அவருக்கு இனி மாநில அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலில் இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். அடுத்து ஐபிஎல் அணியில் வாய்ப்பை இழந்தார். தற்போது மாநில அணியில் இருந்தும் ஓரங்கட்டப்படும் நிலைக்கு சென்று இருக்கிறார் பிரித்வி ஷா. 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் மீதமுள்ள போட்டிகளில் அவர் பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே இதில் இருந்து தப்ப முடியும்.