ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட்டின் 'சிக்ஸர் மன்னன்' என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் கூட செய்யாத ஒரு இமாலய சாதனையை, இளம் வீரர் அபிஷேக் சர்மா நிகழ்த்திக் காட்டியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரே ஆண்டில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 2025 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் (SMAT), பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா, சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.

சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு, அபிஷேக் சர்மா வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 34 பந்துகளில் 62 ரன்கள் குவித்த அவர், அதில் 8 பவுண்டரிகளையும், 3 இமாலய சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
இந்த 3 சிக்ஸர்கள் மூலம், 2025-ம் ஆண்டில் டி20 போட்டிகளில் அவரது சிக்ஸர் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் 100 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 233 ரன்கள் குவித்தது.
இந்த ஆண்டு அபிஷேக் சர்மா ஒரு அசுரத்தனமான ஃபார்மில் உள்ளார் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த ஆண்டு அவர் ஆடிய மொத்த டி20 போட்டிகள் 36 ஆகும். அதில் அவர் 1499 ரன்கள் குவித்துள்ளார். அதில் சிக்ஸர்கள் எண்ணிக்கை மட்டும் 101 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.22 என்பதாக உள்ளது. மூன்று சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்கள் அடித்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் இதுவரை அவர் 304 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 250 என்ற அளவில் உள்ளது. ஏற்கனவே ஆசிய கோப்பைத் தொடரில் 314 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை படைத்ததோடு, ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் இவர்.