மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை சேர்ந்த உர்வில் பட்டேல் என்ற வீரரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சீசனில் பிற்பகுதியில் மாற்று வீரராக அணியில் வந்து சேர்ந்த உர்வில் பட்டேல், முதல் போட்டியிலே அதிரடியை காட்டி இருந்தார்.
உர்வில் பட்டேல், கடந்த ஆண்டு ஏற்கனவே 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தி இருந்தார். இந்த தருணத்தில் சையது முஸ்டாக் அலி டி20 தொடரின் லீச் சுற்று இன்று முதல் தொடங்கியது. இதில் குஜராத் அணியின் கேப்டனாக உர்வில் பட்டேல் களமிறங்கினார்.

சர்வீசஸ் அணிக்கு எதிரான ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 183 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணி துரத்தியது. இதில் உர்வில் பட்டேல் பட்டையை கிளப்பினார். சர்வீசஸ் அணியில் வீசிய பந்துவீச்சை சுளுக்கு எடுத்த அவர் 31 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. ஏற்கனவே டாப் முதலிடத்தில் அபிஷேக் சர்மாவுடன் உர்வில் பட்டேல் இணைந்து உள்ள நிலையில் தற்போது மூன்றாவது இடத்தையும் உர்வில் பட்டேல் இடம் பிடித்தார்.
இதன் மூலம் குஜராத் அணி 12.3 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. 37 பந்துகளை எதிர் கொண்டவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்தார். இதில் 10 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 321 ஸ்ட்ரைக் ரைட்டை அவர் வைத்திருந்தார். இதனால் உர்வில் பட்டேல், சிஎஸ்கே அணி தொடக்க வீரராக பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்திர பிரதேஷ் மற்றும் கோவா அணிகள் மோதினர். இதில் இந்தியாவின் அனுபவ வீரரான புவனேஸ்வர் குமார் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் உத்திர பிரதேச அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்திரபிரதேச அணியில் விக்கெட் கீப்பர் ஆரியன் ஜூயல் 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்து இருந்தார்.
இதேபோன்று ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரகானே 31 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் 30 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ரயில்வே அணியை மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் மும்பை அணியின் கேப்டன் சர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். சிஎஸ்கே வீரர் சிவம் துபேவும் மூன்று ஓவர் வீசி 11 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.