புனே: சையத் முஸ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளது.இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜார்கண்ட், ஹரியானா அணிகள் தகுதிபெற்றன.
டாஸ் வென்ற ஹரியானா முதலில் பந்துவீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஜார்கண்ட் அணியின் ஓப்பனர் விராட் சிங் 2 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் இஷான் கிஷன் மற்றும் துணை கேப்டன் குமார் குஷ்கரா இணைந்து அதிரடி காட்டினர். இந்த ஜோடி 82 பந்துகளில் 177 ரன்கள் குவித்தது.

இஷான் கிஷன் 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் விளாசினார். மறுமுனையில் குமார் குஷ்கரா 38 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்து வலு சேர்த்தார்.
அவர்களைத் தொடர்ந்து, அனுக்குல் ராய் 20 பந்துகளில் 40* ரன்களும், ராபின் மின்ஸ் 14 பந்துகளில் 31* ரன்களும் அதிரடியாக விளாச, ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது.இது இந்திய உள்நாட்டு டி20 இறுதிப்போட்டியில் பதிவான மிக உயர்ந்த ஸ்கோர் ஆகும். மேலும், உலக டி20 தொடர்களின் இறுதிப் போட்டி வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஸ்கோராகும்.
இதன் மூலம் ஜார்கண்ட் அணி சர்வதேச அளவில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதே போன்று சையது முஸ்டாக் அலி தொடரில் இறுதிப்போட்டியில் சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையும் இஷான் கிஷனுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த தொடரில் 500 ரன்களுக்கு மேல் இஷான் கிஷன் குவித்து அசத்தியுள்ளார்.