அகமதாபாத்: சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் டி20 தொடரில் தமிழ்நாடு அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் படுதோல்வியை தழுவி இருக்கின்றது. மூன்று முறை சாம்பியன் ஆன தமிழ்நாடு அணி கடைசியாக சையது முஸ்டாக் அலி கோப்பை 2021-22 சீசனில் வென்றது.
அதன்பின் தமிழ்நாடு அணி தொடர்ந்து சரிவையை சந்தித்து வருகிறது. ஏற்கனவே நடப்பு சீசனில் ரஞ்சிப் போட்டியில் மோசமான தோல்விகளை தழுவிய தமிழ்நாடு அணி, தற்போது டி20 தொடரிலும் தடுமாறி வருகிறது. குரூப் டி பிரிவில் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தமிழ்நாடு அணி தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய கர்நாடகா அணியில் நட்சத்திர வீரர் தேவுதட் படிக்கல் 46 பந்துகளில் 102 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் 10 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். தொடக்க வீர சரத் 53 ரன்களும், இறுதியில் ரவிச்சந்திரன் சமரன் 46 ரன்களும் எடுக்க கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவரில் 47 ரன்களையும், நடராஜன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் எந்த ஒரு வீரரும் பெரிய இலக்கை எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய சாய் சுதர்சன் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
நாராயன் ஜெகதீசன் 21 ரன்களும், கடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ராஜ்குமார் 16 ரன்களும் எடுத்தனர். சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோர் தலா இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் தமிழ்நாடு அணி 14.2 ஓவர்களில் 100 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 145 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணி வெற்றி பெற்றிருக்கிறது.குரூப் டி பிரிவில் தமிழ்நாடு அணி தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றது.