மும்பை: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லீக் ஆட்டங்களில் நேற்றைய தினம் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்தன. நட்சத்திர வீரர்கள் நிறைந்த பலம் வாய்ந்த மும்பை அணியை, முகமது சிராஜ் தலைமையிலான ஹைதராபாத் அணி படுதோல்வி அடையச் செய்தது.
இந்திய அணியின் முக்கிய வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே, சர்பராஸ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே மும்பை அணியில் களமிறங்கியது. ஆனால், ஹைதராபாத் பந்துவீச்சுக்கு முன் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜெய்ஸ்வால் (29), ரஹானே (9), சர்பராஸ் கான் (5), ஷர்துல் தாக்கூர் (0) என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ஹைதராபாத் தரப்பில் அனல் பறக்க பந்துவீசிய முகமது சிராஜ், 3.5 ஓவர்கள் வீசி வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாகத் தனய் தியாகராஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

132 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி, மும்பை பந்துவீச்சாளர்களைப் பந்தாடியது. தன்மய் அகர்வால் 40 பந்துகளில் 75 ரன்களும், அமன் ராவ் 29 பந்துகளில் 52 ரன்களும் விளாசினர். இதனால் ஹைதராபாத் அணி வெறும் 11.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
மற்றொரு போட்டியில் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில் ஆந்திரா அணிக்காக விளையாடிய இந்திய ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் விஸ்வரூபம் எடுத்தார். போட்டியின் 3-வது ஓவரில் ஹர்ஷ் கவாலி, ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ரஜத் படிதார் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அவர் 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எனினும், ஆந்திரா அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததால் (112 ரன்கள் ஆல்-அவுட்), மத்திய பிரதேச அணி போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ரெட்டியின் ஹாட்ரிக் சாதனை அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரன் மழை பொழிந்தது. பஞ்சாப் வீரர் சலில் அரோரா ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 39 பந்துகளில் சதமடித்த அவர், மொத்தம் 125 ரன்கள் (45 பந்துகள், 9 பவுண்டரி, 11 சிக்ஸர்) குவித்து மிரட்டினார். இவரது அதிரடியால் பஞ்சாப் 235 ரன்கள் குவித்தது.
ஆனால், ஜார்கண்ட் பேட்ஸ்மேன்களும் சளைக்காமல் அடித்து ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இருப்பினும், ஐபிஎல் மினி ஏலம் வரவிருக்கும் நிலையில், சலில் அரோராவின் இந்த அதிரடி ஆட்டம் ஐபிஎல் அணிகளின் கவனத்தை நிச்சயம் ஈர்த்திருக்கும்.