மும்பை: "நான் சிறப்பா விளையாடியும் என்னை அணியில் சேர்க்காத போது வலிக்கத் தான் செய்தது.." என்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மனக்குமுறலைக் கொட்டியுள்ளார் இஷான் கிஷன். சையத் முஷ்டாக் அலி ட்ராபி (SMAT) இறுதிப்போட்டியில் 49 பந்துகளில் சதம் விளாசி, ஜார்க்கண்ட் அணியை சாம்பியன் ஆக்கிய கையோடு, பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு தனது பேட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் கிஷன்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர் இஷான் கிஷன். ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் இருந்த சமயத்தில் அவருக்கான கதவுகள் சாத்தப்பட்டன. ஆனால், சோர்ந்து போகாத கிஷன், இந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் ருத்ர தாண்டவம் ஆடினார்.

மொத்தம் 10 இன்னிங்ஸ்களில் 517 ரன்கள் குவித்து, தொடரின் அதிக ரன் ஸ்கோரராக சாதனை படைத்துள்ளார். குறிப்பாக ஹரியானாவுக்கு எதிரான ஃபைனலில் அவர் 49 பந்துகளில் அடித்த 101 ரன்கள் தான் ஜார்க்கண்ட் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
வெற்றிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், "நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போதும் இந்திய அணியில் என் பெயர் இல்லாதது, எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. ஆனால், எனக்கு நானே ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டேன். 'ஒருவேளை இந்த ஆட்டம் போதாது போல, இன்னும் சிறப்பாக ஆட வேண்டும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்று முடிவெடுத்தேன்.
விரக்தி அடைவது நம்மை ஒரு படி கீழே தான் தள்ளும். கடினமாக உழைத்து நம்மை நாமே நம்புவது தான் முக்கியம். இளம் வீரர்களுக்கு நான் சொல்வதும் இதுதான்" என்று கூறினார்.
2026 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், "அணியில் பெயர் இல்லை என்றால் வருத்தம் வரும் தான். ஆனால் நான் இப்போது அந்த மனநிலையில் இல்லை. நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. என் வேலை தொடர்ந்து சிறப்பாக ஆடுவது மட்டும் தான்" என்று கூறினார்.
"என் கேப்டன்சியில் உள்நாட்டு தொடரில் கோப்பை வெல்வது இதுவே முதல்முறை. என் திறமை என்ன, என்னால் ஆட்டத்தை எப்படி மாற்ற முடியும் என்று என்னை நானே நிரூபித்த தருணம் இது. அதனால் இதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இஷான் கிஷன்.
பிசிசிஐ தேர்வாளர்கள் இஷான் கிஷனின் இந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்த பிறகாவது, அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.