அடிலெய்டு: 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் பெங்கால் அணியில் இடம் பெற்றுள்ள மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் பத்தாம் வரிசையில் பேட்டிங் இறங்கி சரவெடி ஆட்டம் ஆடினார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் ஷமி சேர்க்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் முகமது ஷமி.

சையது முஷ்டாக் அலி தொடரில் முகமது ஷமி 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்து தனது அணியை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றினார். 3 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து சண்டிகர் அணியை அதிர வைத்தார். 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையிலான கால் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் கரன் லால் 25 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். விரிதிக் 12 பந்துகளில் 28 ரன்களும், பிரதிப்தா 24 பந்துகளில் 30 ரன்களும் சேர்த்தனர். பெங்கால் அணி 114 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
5 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் களமிறங்கிய முகமது ஷமி பேட்டிங்கில் பட்டையைப் கிளப்பினார். அவர் 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். 188.23 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் மீண்ட பெங்கால் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது.
அடுத்து சண்டிகர் அணி ஆடிய போது முதல் ஓவரிலேயே அந்த அணியின் துவக்க வீரர் அர்ஸ்லான் கானை கோல்டன் டக் அவுட் ஆக்கி அனுப்பினார் ஷமி.