இந்தூர்: 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி டி20 தொடரில் சௌராஷ்டிரா மற்றும் பரோடா அணிகள் இடையே ஆன குரூப் "பி" பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்ட்ரா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
20 ஓவர்களில் 266 ரன்கள் குவித்த சௌராஷ்டிரா அணி, பரோடா அணியை கதறவிட்டது. இந்தப் போட்டியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் போட்டியை சிலாகித்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா இதுவரை விளையாடிய போட்டிகளில் எல்லாம் பரோடா அணி வெற்றி பெற்று இருந்தது.

அவர் இந்தப் போட்டியில் விளையாடாத நிலையில் சௌராஷ்டிரா அணி இமாலய இலக்கை நிர்ணயித்து பரோடா அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சௌராஷ்ட்ரா அணியின் துவக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் 39 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். அவர் 9 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்தார்.
டாரங் கோஹல் 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அவர் 3 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்தார். நான்காம் வரிசையில் இறங்கிய ருச்சிதா ஆஹிர் 30 பந்துகளில் 57 ரன்களும், விஸ்வராஜ் ஜடேஜா 13 பந்துகளில் 24 ரன்களும், ஜெய் கோஹில் 18 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர். ஜெய் கோஹில் 2 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்தார்.
சௌராஷ்டிரா அணி மொத்தமாக 20 சிக்ஸர்களை விளாசியது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 266 ரன்கள் எடுத்தது. பரோடா அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா 4 ஓவர்களில் 59 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். அடுத்து 267 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பரோடா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் சாஸ்வத் ராவத் 38 ரன்களும், பானு பானியா 30 ரன்களும், விஷ்ணு சோலாங்கி 34 ரன்களும் எடுத்தனர். சௌராஷ்ட்ரா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.