பெங்களூர் : ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் பிரபலமடைந்து வருகிறது. சச்சின், விராட் கோலி போன்ற வீரர்கள் சாதனைகள் படைப்பது போல் மித்தாலி ராஜ், ஸ்மிருதி மந்தானா போன்ற வீராங்கனைகள் பல ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார்கள்.
அதிலும் ஸ்மிருதி மந்தானா இந்திய மகளிர் அணியில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உலகப் புகழ் பெற்று வருகிறார். இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்மிருதி மந்தானா, மகளிர் கிரிக்கெட் தொடர்பாக பல கருத்துக்களை கூறியிருந்தார். அதனை தற்போது பார்க்கலாம்..

"நாங்கள் முதலில் மைதானத்தில் விளையாடும் போது பெரும்பாலான மைதானங்கள் காலியாக தான் இருக்கும். ஆனால் தற்போது எங்களுக்கு ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு கொடுக்கிறார்கள். இந்திய அணிக்காக மட்டுமல்ல ஆர்சிபி அணிக்காகவும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் போதும் ரசிகர்கள் அதிக அளவு வந்து போட்டியை பார்க்கிறார்கள்".
"இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒரு கிரிக்கெட் வீராங்கனை ஆகவும், ஒரு பெண்ணாகவும் நான் சில விஷயத்தை விளக்க விரும்புகின்றேன். விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கு ஆண்களுக்கு கொடுக்கப்படும் அதே சம்பளம் பெண்களுக்கும் வேண்டும் என்று கூறுகிறோம் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்".
" எங்களுக்கு வேண்டுவதெல்லாம் சரிசமமான மரியாதை தான். தற்போது எங்களைப் பற்றி ரசிகர்களுக்கு தெரிகிறது. எங்களை பாராட்டுகிறார்கள். எங்களை விமர்சனம் செய்கிறார்கள். இது மகளிர் கிரிக்கெட்டுக்கு உண்மையிலே நல்ல விஷயமாக நான் கருதுகிறேன். இதன் மூலம் ரசிகர்கள் எங்களை கவனிக்க தொடங்கி விட்டார்கள் என நினைக்கின்றேன்".
"இந்த பயணம் எனக்கு உண்மையிலே மகிழ்ச்சியை கொடுக்கின்றது. நான் சிறு வயதில் என்னுடைய தந்தை மற்றும் அண்ணனுடன் விளையாடும்போது மகளிர் கிரிக்கெட் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பத்து வயது இருக்கும் போது தான் முதன் முதலாக விளையாட்டுப் உலகில் சானியா மிர்சா மிகப்பெரிய வீராங்கனையாக உருவெடுத்தார். அதன் மூலம்தான் விளையாட்டு இடம் மகளிர் சாதிக்கலாம் என்று எனக்குத் தெரிந்தது. சானியா மிர்சா எங்களுக்கு ஒரு ஊக்கம் தரும் வீராங்கனையாக இருந்தார்" என்று ஸ்மிருதி மந்தானா கூறியுள்ளார். மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.