திருவனந்தபுரம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களை என்ற வரலாற்று மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 சர்வதேச போட்டி நடைபெற்றபோது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
இதன்மூலம், அதிவேகமாக 10,000 ரன்களை அடித்த நான்காவது பெண் வீராங்கனையாகவும் அவர் திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா, தனது 281வது சர்வதேச இன்னிங்ஸில் களமிறங்கி 28 ரன்கள் சேர்த்த போது இந்த மைல்கல்லை எட்டினார். முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 291 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை எட்டியிருந்தார்; மந்தனா தற்போது அவரது சாதனையை முந்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 4வது டி20 போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. அப்போது மந்தனா ஏழாவது ஓவரில் நிமஷா மதுஷானி பந்துவீச்சில் ஒரு விரைவான சிங்கிள் எடுத்து 10,000 சர்வதேச ரன்களை நிறைவு செய்தார். அதிக சர்வதேச ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் அவர் தற்போது இணைந்துள்ளார்.
இந்த பட்டியலில், முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ், மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், மிதாலி ராஜ் (இந்தியா) - 10868, சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 10652, சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) - 10273, ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 10000*, ஸ்டெபானி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள்) - 9301, மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 8352 ரன்களுடன் இடம் பெற்றுள்ளனர்.
சமீபகாலமாக, தனது ஆரம்பங்களைத் தொடர்ந்து பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியாமல் தடுமாறிய மந்தனா, இந்தப் போட்டியில் தனது 32வது டி20 சர்வதேச அரைசதத்தையும் பதிவு செய்தார். 12வது ஓவரில் ரஷ்மிகா செவ்வண்டி பந்துவீச்சில் பவுண்டரி அடித்து இந்த அரைசத மைல்கல்லை எட்டினார்.
மந்தனாவும் அவரது தொடக்க ஜோடி ஷஃபாலி வர்மாவும் இலங்கை பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு, இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுக் கொடுத்தனர். பவர்பிளே ஓவர்களில் இருவரும் இணைந்து 61 ரன்களை குவித்தனர்.
பெண்கள் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக 50-க்கும் மேற்பட்ட ரன் சேர்ந்த ஜோடியில் ஸ்மிருதி மந்தனா & ஷஃபாலி வர்மா 24 முறை சேர்த்துள்ளனர். அலிசா ஹீலி & பெத் மூனி (ஆஸ்திரேலியா) 20 முறையும், சுசி பேட்ஸ் & சோஃபி டிவைன் (நியூசிலாந்து-18 முறையும், ஈஷா ஓசா & தீர்த்தா சதீஷ் (யுஏஇ) - 18, கவிஷா ஈகொதகே & ஈஷா ஓசா (யுஏஇ) - 14 முறையும் சேர்த்துள்ளனர்.
ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் ஷாபாலி வர்மா 46 பந்துகளில் 79 ரன்கள் குவித்தனர். ரிச்சா கோஸ் 16 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, ஹர்மன்பிரீத் 16 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.