சாதனைகளை முறியடிக்கிறார்.. புதிதாக உருவாக்குகிறார்.. மிரள வைக்கும் ஸ்மிருதி மந்தனா!
டெல்லி: இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டியில் பல சாதனைகளை முறியடித்து வரும் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி ஆட்டம் தொடர்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் 36 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா, இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக விளையாடுகிறார். லோக்பரோக் லைட்னிங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து மிகவும் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த நியூசிலாந்தின் சோபி டிவைனின் சாதனையை அவர் சமன் செய்தார்.

லான்காஷையர் தண்டர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 61 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார் ஸ்மிருதி. இதன் மூலம் பெண்கள் டி-20 போட்டிகளில் சதமடித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். பெண்கள் டி-20 போட்டிகளில் சதமடித்த முதல் வீராங்கனை இந்தியாவின் மிதாலி ராஜ்.
நேற்று நடந்த யார்க்ஷையர் டயமண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 36 பந்துகளில் 56 ரன்கள் அடுத்தார் ஸ்மிருதி. இந்தத் தொடரில் அவர் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் அசத்தலாக விளையாடியுள்ளார். 48, 37, ஆட்டமிழக்காமல் 52, ஆட்டமிழக்காமல் 43, 102, 56 என மொத்தம் 338 ரன்கள் எடுத்துள்ளார்.
2016ல் இரண்டாவது இடத்தையும், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வெஸ்டர்ன் ஸ்டாரம் அணி பெற்றது. இந்த அணியின் ஸ்டெபானி டெய்லர் 2016ல் 289 ரன்களும், கடந்த ஆண்டு ராச்செல் பிரீஸ்ட் 261 ரன்களும் எடுத்தனர். தற்போது 338 ரன்களுடன் ஸ்டார்ம் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த சாதனையைப் புரிந்துள்ளார் ஸ்மிருதி.


Click it and Unblock the Notifications