சாங்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அவர் திருமண நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி இருக்கிறார்.
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் திருமண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து திருமணக் கொண்டாட்டப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான மெஹந்தி, ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து முடிந்தன. மணப்பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டார் இணைந்து ஜாலியாக ஒரு கிரிக்கெட் போட்டியையும் நடத்தினர். இதில் சமீபத்தில் உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பலரும் கலந்துகொண்டனர்.
எல்லாம் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர் சாங்லியில் உள்ள சர்வஹித் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தந்தையின் உடல்நிலை ஒருபுறம் கவலை அளித்த நிலையில், அடுத்த நாளே மணமகன் பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குடும்பத்தினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிர்ஷ்டவசமாக பலாஷ் விரைவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் தற்போது மும்பை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், ஸ்மிருதி மந்தனா தனது திருமணத்தை காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார். குடும்பமே சோகத்தில் இருக்கும் இந்தச் சூழலில், கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பதால், சமூக வலைதளங்களில் தான் பகிர்ந்திருந்த நிச்சயதார்த்த வீடியோக்கள், திருமண வரவேற்பு வீடியோக்கள் மற்றும் கொண்டாட்டப் புகைப்படங்கள் அனைத்தையும் அவர் அதிரடியாக நீக்கிவிட்டார்.
ஸ்மிருதியின் இந்த முடிவுக்கு மதிப்பளித்து, அவரது நெருங்கிய தோழிகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்த திருமண தொடர்பான வீடியோக்களை நீக்கிவிட்டனர். புகைப்படங்கள் நீக்கப்பட்டதால் இந்த திருமணம் மீண்டும் நடக்குமா? என ரசிகர்கள் தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். பலாஷ் முச்சலின் சகோதரி, இரு குடும்பத்தினரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில்தான் மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 434 ரன்கள் குவித்து முக்கியப் பங்காற்றியிருந்தார். உலகக்கோப்பை மகிழ்ச்சியோடு திருமண வாழ்க்கையில் நுழையக் காத்திருந்த அவருக்கு, இப்படியொரு சோதனை ஏற்பட்டிருப்பது கிரிக்கெட் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையின் உடல்நிலை சீரான பிறகே திருமணத் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.